இயற்கையோடு இயைந்த வாழ்வால் வான்புகழ் கொண்டுத் திகழ்ந்தது நம் பண்டையத் தமிழர் இனமாகும். இங்கே உண்பதும், உடுத்துவதும், பக்தியும், பண்டிகையும், இறையும், இலக்கியமும், கலையும், கவிதையும், வீரமும், விளையாட்டும் என்று யாவுமாகி நின்று அழகு செய்தவள் நம் இயற்கை அன்னையே! சங்க காலத்தில் மட்டுமல்ல. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் கிராமங்களை நினைத்துப் பாருங்கள்.
பூவரசு இலைகளில் ‘பீப்பி’, நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து, வாழைத் தோப்புகளில் திருடன்-போலிஸ் என்று அங்கே விளையாட்டுக்கு கூட இயற்கை இல்லாமலில்லை. பிறந்த குழந்தையின் தொட்டிலிருந்து கடைசியில் கிடத்தும் கட்டில் வரையிலும் இயற்கை என்றிருந்த நிலை மாறி இன்று எங்கும் பிளாஸ்டிக்! எதிலும் பிளாஸ்டிக்! என்றாகிவிட்டது. விலையோ குறைவு. உற்பத்தி செய்வது எளிது. இன்றைய உலகின் அன்றாடத் தேவையை ஈடுசெய்ய இதற்கு மாற்று எதுவுமில்லாத சூழலில் எங்ஙனம் பிளாஸ்டிக் இயற்கையின் பகைவன் ஆனது என்பதையும், இத்தகைய பிளாஸ்டிக் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்களை எரிப்பது இயற்கைச் சூழலை எங்ஙனம் பாதிக்கின்றது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.
நெகிழியின் பிறப்பு
தமிழில் நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் என்பது ‘பிளாஸ்டிக்கோஸ்’ என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. வார்க்கத் தக்க அல்லது பிசைவு கொள்ளத் தக்கப் பொருள் என்று இதனை வரையறுக்கலாம். தொடக்கக் காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள், சில வண்டு, பூச்சிகளில் இருந்து ‘செராடின்’ என்ற நெகிழியானது செய்யப்பட்டன. பின்னர் எவ்வாறு பிளாஸ்டிக்கானது முழுக்க முழுக்க செயற்கை வேதி மூலங்களிலிருந்து தயாரிகக்கப்படுகின்றன என்பதை கீழ்வரும் காலக்கோடு மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
- பிளாஸ்டிக் முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் ‘பார்க்ஸ்டைன்’ என்ற பெயரிட்டார்.
- பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற பிளாஸ்டிக் உருவானது.
- 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், டுபாண்ட் என்னும் அமெரிக்க நிறுவணம் வெடி பொருள் பிளாஸ்டிக்; தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.
- 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
நெகிழியின் வகைகளும், பயன்களும்
வெப்பத்தால் எற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு. அவை முறையே இளகும் வகை, இறுகும் வகை என்பனவாகும்.
1.வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. அவற்றின் பெயர்களையும், பயன்பாடுகளையும் இங்கே காண்போம்.
- செல்லுலாயிட்: எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
- பாலி புரோப்பிலின்: கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள், குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
- பாலிவினைல் குளோரைடு: மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
- பாலிவினைல் அசிட்டேட்: வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
- வினைல் : டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
- அக்ரிலிக்: நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது. இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்
- செல்லுலோஸ் அசிட்டேன்: இதனுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
- ஈதைல் செல்லுலோஸ்: பொருள்கள் மீது மேல் பூச்சு அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
2.இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன. அவற்றின் சில எடுத்துக்காட்டுக்களை கீழே காண்போம்.
- ஆல்கைடு ரெசின் : பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. மின்சாரம் கடத்தாது. உறுதியானது. கடினமானது. ஒளி புகும். எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
- மெலமின் ரெசின் : இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
- பீனாலிக் ரெசின் : மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்யப் பயன்படுகின்றது.
இவ்வாறு விலை மிகவும் மலிவாகவும், அனைவரையும் கவரும் பல வகை நிறங்களிலும், காற்று, நீர், ஈரம் இவற்றால் பாதிக்கப் படாமலும், மின்கசிவு ஏற்படாமலும் இருப்பதால் நெகழியானது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.









